நேர்காணல்: எஸ்.ஜீவா
ஒரு புத்தகம் நன்றாக இருந்தாலும் எல்¬லோ¬ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை.
அதாவது எல்லோரும் விரும்பும் வகையில் அனைத்தும் முழுமையாக இருக்குமென கூற முடியாது. ஒரு புத்தகம் பலரின் கைகளில் சேர்ந்த பின்பு அதனை விமர்சிக்கலாம்.
அதுவும் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக்கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.
இது காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.
பிழையான விமர்சனங்கள் மூலம் புத்தகத்திற்கான வரவேற்பு முற்றாக தடைப்பட்டுவிடுகிறது.
இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்கிறார் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளர் நடேசன்.
வாழும் சுவடுகள் , அசோகனின் வைத்தியசாலை , மலேசியன் ஏர்லைன் 370 ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் வெள்ளவத்தை தேசிய கலை இலக்கிய பேரவையில் மூத்த எழுத்தாளர் சாகித்யரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்காக இலங்கை வந்திருந்த எழுத்தாளர் நடேசனை சந்திக்கும் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கு வாசகர்களுக்காக தருகின்றோம்.
மிருக வைத்திய துறையில் தேர்ச்சிபெற்ற நீங்கள் எவ்வாறு எழுத்துத்துறைக்குள் பிரவேசித் தீர்கள்?
ஆரம்ப காலங்களில் நான் அதிகமாகவே புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். விடுதலைப் போராட்டங்கள் இடம்பெற்ற காலங்களில் 90 வீதமானவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
ஆனால், புலம்பெயர்ந்த காலத்தில் நம்மில் சிலர் இதனை சற்று வித்தியாசமாக சிந்தித்திருந்தோம். அதாவது 20 பேர் இணைந்து ஒரு பத்திரிகையை ஆரம்பித்தோம். அப்பத்திரிகையை திருத்த வேலைப்பாடு செய்யும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ், ஆங்கில மொழிகளை உள்ளடக்கிய 24 பக்கங்களைக்கொண்டதாக அமைந்திருந்தது. உதயம் எனும் பெயரிலான இப்பத்திரிகை பணியை 15 வருடமாக செய்து வந்தேன்.இதனை செய்யும் போது நான் தமிழ் மொழியை நன்றாக கற்றுக்கொள்ளக்கூடியதான வாய்ப்புக்கிட்டியது.
அத்தோடு அப்பத்திரிகையில் எழுத வேண்டிய தேவையும் எனக்கு ஏற்பட்டது. இவ்வாறான தொடர் செயற்பாடுகள் என்னை எழுத்துத் துறைக்குள் ஆர்வமாக பிரவேசிக்க ஏதுவாக அமைந்திருந்தது.
ஒரு எழுத்தாளராக நீங்கள் எழுதிய சிறுகதை நாவல்களுக்கும் ஏனைய இலக்கியவாதிகளின் படைப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவ்வாறு ஏதேனும் உணர்ந்ததுண்டா?
புலம்பெயர்ந்தவர்களில் மிகவும் அரிதானவர்களே புலம்பெயர் நாட்டு விடயங்களை எழுதுகின்றனர்.
புலம் பெயர்ந்த வர்களில் ஆரம்ப காலத்தில் லண்ட னிலிருந்து எழுதிய இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தை குறிப்பிட்டுக்காட்டலாம். சில விடயங்களில் முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி ஆகியோரும் எழுதியுள்ளனர்.
புலம்பெயர்ந்த காலத்தில் நானும் பல நூல்களை எழுதினேன். எனது நூல் அவுஸ்திரேலிய கலாசாரம், அந்நாட்டின் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக இருந்தது.
நாய், பூனை போன்ற மிருகங்கள் வாயிலாக சமூகத்துக்கு பல விடயங்களை கொண்டு வரும் முகமாக பல நூல்களை எழுதினேன்.
ஒரு புத்தகம் மாத்திரமே இலங்கையை பற்றி எழுதினேன்.
இலங்கை குறித்த பெரும்பாலான விடயங்களை நான் எழுதியிருந்தாலும் 85 வீதமான விடயங்கள் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பாகவே அமைந்துள்ளது.
நான் இலங்கையில் பிறந்தவன் 29 வருடங்கள் இலங்கையிலும் மூன்று வருடங்கள் இந்தியாவிலும் இருந்தேன்.ஆகையால், முற்று முழுதாக என்னுடைய சிந்தனை தமிழாகத்தான் இருந்தது. நான் ஓரளவு அரசியல் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினாலும் இலக்கியங்களை என்னால் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுத முடியாத நிலைமையே ஏற்பட்டது.
மேலும் என் சார்ந்த செயல்களுக்கும் என்னோடு தொடர்புபட்டவர்களுக்கும் ஒரு இணைப்பை பேண நான் தமிழை உபயோகிக்கிறேன்.
அவுஸ்திரேலியாவிலுள்ள இளம் தலைமுறையினர் தமிழ்மொழி மீது எவ்வாறான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்?
மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்று கூறிவிட முடியாது. தமிழ் மொழியை வீட்டில் வைத்து கற்றுக்கொடுத்து பேசினாலும் முழுமையாக அதனுள் அவர்கள் உள்வாங்கப்படவில்லை.ஏனெனில் அந்நாட்டை பொறுத்த வரையில் ஆங்கில மொழியிலேயே உரையாடுகின்றார்கள். ஆங்கிலக் கல்வியையே கற்கின்றனர். இந்நிலையில் தமிழ் மொழியை எந்தளவு ஆர்வத்துடன் கற்பார்கள் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
பொதுவாக தமிழ் மொழியில் பேசுவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியுமே தவிர முழுமையாக அதனை கற்றுக்கொள்ள முடியாது. எந்த மொழி இயல்பாக வருகின்றதோ அந்த மொழியில் பேச இடமளிப்பது தான் சிறந்தது.
உங்களது வைத்திய துறை எவ்வாறு இலக்கியத்திற்கு துணை நின்றது?
வைத்தியத்துறையில் நான் பார்த்த சில விடயங்களை என்னால் இலக்கியமாக்கக் கூடிய ஒரு தன்மை இருந்தது. இலக்கிய விருப்பம் இருந்த படியால் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டேன்.
இதற்கு முன்னர் ஆங்கிலத்தில் அதிகமானோர் இவ்வாறான முயற்சிகளை செய்துள்ளனர். அதாவது மிருகங்களை இலக்கியத்துறையோடு சம்பந்தப்படுத்தி இலக்கியம் படைத்திருப்பதை காணலாம். அவ்வாறான ஒரு தன்மை தமிழில் இருக்கவில்லை.
அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்கள் மிருகங்களை தம் உறவாகவே அதாவது தமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே பார்க்கும் நிலை காணப்படுகின்றது.
ஆதலால், அவர்களுக்கு நாய், பூனை என மிருகத்துடனான பிணைப்பு அதீதமான தோழமையோடு காணப்பட்டது.இவையெல்லாம் அவர்களுடைய கலாசாரத்திற்குள்ளே ஒன்றித்துவிட்டது என்பதால் பெரும்பாலான கதைகள் மிருகங்களின் உணர்வுகளை பற்றி பேசுகிறன.
மனிதர்களின் குறைபாடுகளை நாய், பூனை மூலமாக வெளிப்படுத்துவதை ஒரு யுக்தியாக நான் கையாண்டேன்.
நீங்கள் எழுதிய புத்தகமொன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. இந்த புத்தகம் அவுஸ்திரேலியர்களிடம் எவ்வாறான வரவேற்பைப் பெறும்
என எதிர்பார்க்கின்றீர்கள்?
ஆம்! மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை. பொதுவாகவே அங்குள்ளவர்களுக்கு மிருகங்கள் தொடர்பான ஆர்வம் அதிகம் என்பதால், ஈடுபாட்டோடு வாசிப்பார்கள்.
மேலும் நான் பார்க்கும் கோணத்தில் அவர்கள் பார்ப்பார்களா இல்லையா என்பதை என்னால் கூற இயலாது. நான் எழுதிய அதிகமான விடயங்கள் இணையத்தளங்களில் வெளி வந்துள்ளன.
அதை பெரும்பாலானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
என்னுடைய முதல் நாவல் ”வண்ணாத்திக்குளம்” ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கி¬ற¬து. அதனையெல்லாம் வாசகர்கள் அதிகமாகவே வாசித்துள்ளனர்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி ஒரு எழுத்தாளராக உங்களின் கருத்து?
ஈழத்தில் உள்ள பெரும் பிரச்சினை தான் ஈழத்தில் ஒருவரும் எழுதி ஜீவிக்க இயலாது.
அதனடிப்படையில் அவர்களுடைய ஜீவனோபாயத்துக்கு இல்லாத பட்ச¬த்தில் எழுத்து என்பது ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும். இவ்வாறு பொழுதுபோக்காக எழுதுபவர்கள் எவ்வளவு ஈடுபாட்டோடு எழுதுவார்கள் என்று கூற முடியாது.
நான் எனது மகிழ்ச்சிக்காகத்தான் எழுதுகிறேன். மேலும் ஈழத்தில் இடம்பெற்ற போர் ஈழத்து இலக்கியத்துறையை பல வழிகளில் பாதித்துள்ளது.
இலக்கியம் இன வேறுபாடின்றி இருந்தாலும் போரால் முஸ்லிம் தமிழர்களிடையே ஒரு பிரிவு ஏற்பட்டது.இது சிந்தனை ரீதியாகவும் உறவு ரீதியாகவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் நன்றாக எழுதக் கூடியர்வர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர். அதுவும் ஒரு பாதிப்பு.
அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் ஆர்வம் எவ்வாறு உள்ளது? அங்கு தமிழ் மொழிக்கென ஏதேனும் சங்கங்கள் இருக்கின்றனவா?
நான் அவுஸ்திரேலிய கலை கலாசார சங்கத்தில் செயலாள¬ராக உள்ளேன். டாக்டர் காந்தராஜா தலைவராக உள்ளார். எங்களால் முடியுமானவரை செயலாற்றிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், நாம் ஒரு புத்தகத்தை இங்கு வெளியிட்டாலும் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போன் போன்ற நகரங்களில் வாசிப்பு என்பது குறைவாகத்தான் உள்ளது.
தற்போது எழுத்தாளர்களிடையே போட்டி அதிகமாக உள்ளது. அதனை பற்றி?
இப்பிரச்சினை தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் உள்ளது.
இலங்கையில் தனித்தனி தீவுகள் போன்ற நவக்கிரகங்களாக எழுத்தாளர்¬கள் உள்ளனர். ஒரு எழுத்தாளருடைய புத்தகத்தை படித்துவிட்டு அதன் அனுகூலங்க¬ளை கூறுவது குறைவாக உள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் ஒரு புத்தகம் நன்றாக இருந்தாலும் கூட, எல்லோருக்கும் 100 வீதமாக இருக்கப்போவதில்லை.
அத்தோடு எல்லோருக்கும் பிடித்ததாக எல்லாம் முழுமையாய் இருக்கு¬மென கூறமுடியாது. ஒரு புத்தகம் பலரின் கைகளில் சேர்ந்த பின்பு அதனை விமர்சிக்கலாம்.
அது மாத்திரமன்றி குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக்கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.
இது காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.
பிழையான விமர்சனங்கள் மூலம் புத்தகத்திற்கான வரவேற்பு முற்றாக தடைப்பட்டுவிடுகிறது. இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
உங்களை நீங்கள் வாசிக்கப்படுபவராக எவ்வாறு மாற்றிக் கொண்டீர்கள்?
நான் தமிழ் புத்தகங்களை வாசித்ததை விட ஆங்கில புத்தகங்களிலிருந்தே இலக்கிய அறிவினை பெற்றுக்கொண்டேன்.
உண்மையை கூறுவதானால் நான் ஆழமாக தமிழ் கற்றவனல்ல. நான் கற்றது விஞ்ஞானம். அதனால் சாதாரணமான வார்த்தைகள் தான் என்னிடமிருந்து வெளிப்படும். அதனால் இலகு தமிழில் எழுதுவேன்.
அந்த காலத்தில் ஆறுமுகநாவலர் போன்றவர்களின் இறுக்கமான ஆழமான தமிழ் என்னிடம் கிடையாது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இலகுவாக வாசிக்கப்படுவதற்கு.
தற்போது எகிப்திய பயண கட்டுரை ஒன்றை இவ்வருடத்துக்குள் வெளியிட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு தமது இலக்கியத்துறை மற்றும் மருத்துவத்துறை குறித்த அனுபங்களை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் அவுஸ்திரேலிய நடேசனுக்கு வீரகேசரி சங்கமம் சார்பில் எமது நன்றி¬யை தெரிவித்துக்கொண்டோம்.
