சிட்னியில்
மூத்த எழுத்தாளர் அமரர் காவலூர் ராஜதுரை
இறுதி நிகழ்வு
பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளருமான காவலூர் ராஜதுரையின் மறைவையடுத்து அன்னாரின் இறுதிநிகழ்வுகள் சிட்னியில் நடைபெற்றபொழுது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
தமது 83 வயதில் காலமான காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வு – இரங்கல் நிகழ்ச்சி கடந்த 20 ஆம் திகதி சிட்னியில் Red gum Centre இல் நடைபெற்றது.
திருவாளர்கள் Mark Schulz , திருநந்தகுமார், சரத் விக்கிரமகே, இரா. சத்தியநாதன், எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, முருகபூபதி மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் பணியாற்றிய திருமதி ஞானம் ரத்தினம் , வானொலி மாமா நா. மகேசன் ஆகியோர் ராஜதுரையின் சிறப்பியல்புகளையும் அவரது பல்துறை ஆற்றல்களையும் விதந்து குறிப்பிட்டு உரையாற்றினர்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனுதாப அஞ்சலி உரையை சங்கத்தின் உறுப்பினர் திரு. ஆவூரான் சந்திரன் வாசித்தார்.
சங்கத்தின் சார்பில் ஓவியக்கலைஞர் திரு. ஞானம் ஞானசேகரம் ராஜதுரையின் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
காவலூர் ராஜதுரையின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஒளிப்படக்காட்சி தொகுப்பும் காண்பிக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஒளிப்படக்காட்சியை ஒளிப்படக்கலைஞர் திரு. ஈழன் இளங்கோ நேர்த்தியாக தொகுத்திருந்தார்.
பின்னணியில் அமரர் பாடகர் எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய ஈழத்துப்பாடல்கள் ஒலிக்கப்பட்டன.
அவுஸ்திரேலியா S B S வானொலி ஊடக தமிழ்நிகழ்ச்சி ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் சமூகப்பணியாளருமான திரு. குலசேகரம் சஞ்சயன் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்திருந்தார்.
21 ஆம் திகதி Rookwood Gardens இல் நடைபெற்ற இறுதிச்சடங்கில் காவலூரின் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரங்கல் உரைகளை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வுகளில் கலந்துகொண்ட அன்பர்கள் திருமதி கிரேஸ் ராஜதுரையிடம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
********************
