Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

அசோகனின் வைத்தியசாலை -7

$
0
0

Beautiful-Fingers

சுந்தரம்பிள்ளையின் மூன்றாவது நாளில் வேலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி நடுநிசியில் முடிவது எனக் கூறப்பட்டது. இரவு வேலை தனித்து ஒரு வைத்தியராக செய்ய வேண்டும். அதைவிட அவசர சிகீச்சைகள் செய்ய வேண்டி இருக்கும் என்பது மனத்தில் அச்சத்தை கொடுத்தது. அன்று முழுவதும் அதே நினைவால் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. புதிதாக வேலையில் சேர்ந்த என்னை தனியாக இரவில் வேலை செய்ய சொன்னது சரியா என சிந்தனை ஓடியது.

சமுத்திரத்தில் வீழ்ந்த பின்பு எப்படியும் சமாளிக்கவேண்டியதுதானே? பதற்றமும் சமாதானமும் எதிரும் புதிருமாக அலைகளாக மனத்தில் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்ததால் வீட்டில் இருந்து அரை மணிக்கு முன்னராகவே வைத்தியசாலைக்கு சென்றிருந்தான்
வைத்தியசாலை சென்றதும் என்னோடு இன்று இரவு சேர்ந்து வேலை செய்யப் போகும் நர்ஸ் யாராக இருக்க முடியும் என்ற ஆவல் மனத்தில் ததும்பியது. நேற்று சாமிடம் கேட்டபோது புதிதாக ஒருவரை போடுவதாக காலோஸ் கூறியதாக சொன்னான்.

அந்த மாலை நேரம் பலரும் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு வீடு செல்ல இருப்பதால் ஓவ்வொருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருந்ததால் ஒருவரையும் கேட்க முடியவில்லை.

சரி யாராவதாக இருக்கட்டுமே. இப்ப என்ன வந்தது?

வைத்தியசாலையின் லாண்டரி அறையில் இருந்தவற்றில் சுத்தமான வெள்ளையான மேலங்கியை எடுத்துக்கொண்டு, இன்னும் வேலை ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் இருப்பதால் தேனீர் அறைக்கு செல்வோம் என நினைத்து, கொறிடோர் வழியாக சென்ற போது வழியில் உள்ள ஆபிரேசன் தியேட்டரில் யார் இன்று வேலை செய்கிறார்கள் என அறிய திடீர் ஆவல் மனத்தில் முளைவிட்டது. அதை நிறைவேற்ற நினைத்து உள்ளே எட்டிப் பார்த்த போது ‘உள்ளே வரலாம் நண்பரே’ என்றார் ரிமதி பாத்தோலியஸ்.

சிலமாதங்களுக்கு முன்பாக குயின்ஸிலண்ட் மாநிலத்தில் இருந்து வந்து இந்த வைத்தியசாலையில் சேர்ந்த ரிமதி பாத்தோலியஸ் மற்ற வைத்தியர்களில் இருந்து தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தார். அந்த வைத்தியசாலையில் முற்றாக தலையை மழித்தவர் அவர் மட்டுமே. நீள் வட்டமான அவரது முகத்திற்கு அந்த சவரம் செய்யப்பட்ட தலை பொருத்தமாக இருந்தது. உச்சித் தலையில் இரண்டு அங்குலத் தடிப்பான தழும்பு கத்தியால் கொத்திப் பார்த்த செவ்விளனியை நினைக்க வைத்தது. உதடுகள் பென்சிலால் வரைந்தது போல் சிறிதாக அமைந்திருந்தது. கண்கள் பெரிதாக சிவந்து இருந்தது. இதைவிட மனிதர் ஓடுவதற்கு பாவிக்கும் அடிடாஸ் காலணி அணிந்திருந்தார். வைத்தியருக்குரிய தோற்றம் அவரில் இருக்கவில்லை.சரி அவர் எப்படி இருந்து விட்டு போகட்டுமே. இப்படித்தான் வைத்தியர் உடையணிய வேண்டும், காலணி அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா?

சில கடந்த இரண்டு தினங்களில் தேநீர் கூடத்தில் சிலமுறை சந்தித்தபோது ஒரு சிரிப்பையும் காணமுடியவில்லை. கண்களிலும் முகத்திலும் இரத்தத்தை பரவ விட்டபடி வலம் வந்தார். யார் மீதோ கடுப்புடன் இருக்கிறார் என எண்ணத் தோன்றியது.

ரிமதி பாத்தோலியஸ் நண்பரே என கூறினாலும் அந்தத் தொனியில் நட்பு இருக்காததை சுந்தரம்பிள்ளையால் அவதானிக்க முடிந்தது. ரிமதி பாத்தோலியசுடன் ஏற்கனவே அறிமுகமான இங்கிலாந்தை சேர்ந்த ஜெனட் நேர்சாக உதவி செய்து கொண்டிருந்தாள்.

உள்ளே சென்ற போது ஆபிரேசன் மேசையில் அவுஸ்திரேலியாவின் மாட்டுப்பண்ணைகளில் வேலை செய்யும் புளு கீலர் இனத்து நாய் பச்சை நிறத்து துணியால் மூடப்பட்டு இடது பின்னங்கால் மட்டும் வெளித் தெரிந்தது. அந்த காலில் தொடையில் தசைகள் வெட்டப்பட்டு விலக்கப்பட்டு, முறிந்த எலும்பில் ஒரு உருக்கு பிளேட்டை வைத்து ஆணியை செலுத்திக் கொண்டிருந்தார் ரிமதி பாத்தோலியஸ்.

.இப்படியான எலும்புகளை இரும்பு பிளேட்டால் ஒருங்கிணைக்கும் வேலையை சுந்தரம்பிள்ளை படித்திருந்தாலும் இதுவரை செய்வதைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.

‘ரிமதி , இது பெரிய ஆப்பரேசன் போல இருக்கிறது? ஆவலுடன் பார்த்தபடி.

‘ஆமாம் இடது பின்னங்காலும் வலது முன்னங்காலும் கார் விபத்தால் உடைந்திருக்கிறது. பின்னங்காலுக்கு பிளேட்டை பொருத்திவிட்டு முன்னங்காலில் உருக்கு கம்பியை வைக்கப்போகிறேன்;’ எனப் பெருமிதமாக தலையை நிமிர்த்தி கூறினான்.

வாகன விபத்தில் முன் ,பின் இரண்டு கால் முறிந்தால் அந்த இரண்டு கால்களை இணைக்கும் முதுகுதண்டில் காயம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு என்பது எங்கேயோ படித்த ஞாபகத்தில் கேட்க விரும்பினாலும் ஒரு கணம் சுந்தரம்பிள்ளை சிந்தித்தான்

கிரேக்க அறிஞர்கள் அறிவின் வளர்ச்சி கேள்விகளில் இருந்து தொடங்குகிறது என சொன்னார்கள் இல்லையா? ஆனால் இந்த கேள்வி இராமர் மந்தாரையின் கூனான முதுகை நோக்கி களிமண் உருண்டைகளை ,இராமர் எய்தது போன்ற விடயம் என அப்போது சுந்தரம்பிள்ளைக்கு தெரிந்திருக்கவில்லை.

‘இரண்டு கால்களில் முறிவு இருப்பதால் முதுகுத்தண்டில் பிரச்சனை எதுவும் இல்லையா? |

எதுவித பதிலும் சொல்லாததால் குனிந்தபடி தனது வேலையை தொடர்ந்து செய்ததால் இந்தக் கேள்வி ரிமதிக்கு பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்தக் கேள்வியால் அவனுக்கு ஏற்பட்ட சங்கடத்தை தவிர்ப்பதற்ககாக ரிமதி மெச்சக்கூடிய அடுத்த கேள்வியை கேட்டு விட்டு சுமுகமாக அந்த இடத்தை விட்டு நகர தீர்மானித்தான்.

‘ இன்று இரவுவரையும் வேலை செய்யவேண்டி இருக்குமே?

‘வேலைக்கு வந்தால் அப்படித்தான் வேலை செய்யவேண்டும். உங்களைப் போல் மதிய இடைவேளையில் மதுச்சாலைக்கு போய் பெண்களின் முலைகளை பார்த்துக் கொண்டிருந்தால் இப்படி வேலை செய்யமுடியாது.| சொல்லிய போது முகத்தில் சிரிப்பு இல்லாமல் தொனியில் கடுமை தெரிந்தது.

~ரிமதி அப்படி பேசாதே. காலோஸ்தான் சிவாவை கூட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். மதுபானசாலை எங்கிருக்கென சிவாவுக்கு தெரிந்திராது.|

~நான் அந்த பாஸ்டட்டையும் சேர்த்து தான் சொல்கிறேன்.| மீண்டும் அதே காட்டத்துடன்

அந்த வார்த்தைகளை சொல்லும்போது ரிமதி பாத்தோலியஸ்ன் முகத்தில் சிவப்பு படர்ந்தது. கண்களில் இருந்த வெறுப்பும் வார்த்தைகளில் இருந்த வெப்பமும் சுந்தரம்பிள்ளையை திடுக்கிட வைத்தது. நாக்கு விறைத்து வார்தைகளை தற்காலிகமாக தொலைத்து விட்டது. ஜெனட்டின் வார்தைகள் வந்து தற்காலிகமாக அந்த இடைவெளியை நிரப்புவதற்கு உதவியது. அந்த இடைவெளியில் தன்னை சுதாரித்த போது நாக்கு மீண்டும் உயிர்பெற்று உதவிக்கு வந்தது.

~ரிமதி நீ தவறான மரத்தைப் பார்த்து குரைக்கிறாய்| என கூறிவிட்டு ஆப்பிரேசன் தியேட்டரின் வாசலை திறந்து கொண்டு வெளியே வந்த சுந்தரம்பிள்ளைக்கு நாகரிகத்துக்காக வார்த்தைகளைத் மேலும் தவிர்த்துக் கொண்டாலும் மனத்தில் கோபம் கொதி நிலையில் மூடிய உலை போல பொங்கிக் கொண்டு வந்தது. நான் பெண்களின் முலையை பார்த்தாலும் மதுசாலைக்கு போனாலும் நீ யார் கேட்பது என்று கேட்டு விடவேண்டுமென மத்தியில் உள்ள மூளையின் பகுதி நினைத்தாலும் முன் பக்கத்து மூளை அதிக கோபத்தில் எக்காலத்திலும் பதில் சொல்லாதே எனக்கூறி சாந்தப்படுத்தியது.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளில் அறிவார்ந்த பதில் இருக்க முடியாது. ஏற்கனவே கோபம் மூளையின் பகுத்தறியும் பகுதியான முன் மூளையை இரும்புத்திரைபோல் மூடிவிடுகிறது. ஆத்திரத்தில் வரும் வார்த்தைகள் எதிரியின் இரும்பிலான மார்புக்கவசத்தை குத்தி மழுங்கும் அம்பின் கூர்முனைகள் ஆக எது வித பிரயோசனம் அற்றுவிடுகின்றன. எதிரிக்கு நட்டத்தை உருவாக்குவதில்லை. ஆனால் பகை உணர்வு மேலும் வளர்ப்பதுதில் முடியும்; இந்த உண்மையை சிவா சுந்தரம்பிள்ளை உணர்திருந்தால் மனத்தின் சினத்தை அடக்கிக் கொண்டு தத்துவ ரீதியாக சிந்தித்தான்.

இந்த வைத்திய சாலையில் கடந்த இரண்டு நாட்களில் பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். மிகவும் நட்பார்ந்த சாம், ஜோன், அன்ரு மத்தியில் பழகுவதற்கு இலகுவான மேலாளாராக டாக்டர் காலோஸ் சேரம் இருக்கும் போது ரிமதி பாத்தோலியஸ் என்ற ஒரு வில்லனும் உருவாகியிருகிறார். கருப்பும் வெள்ளையும் நன்மையும் தீமையும கொண்டது தான் உலகம். மனிதர்களிலும் இது காணப்படுகிறது என்ற சீனர்களின் ஜின் -யாங தத்துவம் இந்த விடயத்தில் உண்மையாகிறது.

மனக்கொதிப்புடன் அந்த வைத்தியசாலையின் தாள்வாரத்தில் நடந்து வரும் போது எதிரே வந்த பெண் சுந்தரம்பிள்ளையை பார்த்து சிரித்தது மனத்தில் புகைந்த கோபத்தை உடனே தண்ணீராக அணைத்துவிட்டது. அவள் கூந்தல் தங்கத்தின் நிறத்தில் இருந்தது. தலைமயிர்களை உயர்;த்தி டயானா இளவரசி போல வெட்டியதால் கழுத்து நீண்டு இருந்து. அவளது கூர்மையான நாசியும் அதற்கு கீழ் சிறிது குவியலாக அமைந்த சிவந்த உதடுகளும் கொண்ட அந்த பெண் சிரித்தபடி மாலை நேரத்தில் தரையில் நடந்து வரும் முழுநிலவாக எதிரே சிறிது மெதுவாக நடந்து வந்தாள். இடுப்புக்கு கீழ் கொஞ்சம் அதிகமான தசைப்பிடிப்பு அவளை கொஞ்சம் மெதுவாக நடக்க வைக்கிறது. ஆனால் அது கூட அவளுக்கு கவர்ச்சியைக் கொடுக்கிறது என எண்ணும்படி இருந்தது.

அவள் சுந்தரம்பிள்ளையை பார்த்து‘ ‘நான் போலின் இன்று இரவு உங்களுடன் வேலை செய்கிறேன்’ மென்மையான குரலில் கூறினாள். அந்தக் பெண்ணின் அழகுடன் ஒரு பாட்டிசைக்கும் பறவை போல இருந்த அவளது குரலும் சுந்தரம்பிள்ளையின் காயம்பட்ட மனத்தின் மேல் மை தடவினது போன்று இருந்தது. பெண்களின் அழகும் சங்கீதமும் ஆண்களின் மனக்காயத்தை மாற்றும் ஆற்றல் கொண்டது எனக் கேள்விப்பட்டாலும் இங்கே இரண்டும் ஒன்றாக இவளில் ஒன்றாக இருக்கிறது.

இருவரும் ஒன்றாக தேநீர் அருந்தும் அறைக்கு சென்றபோது சற்று நேரத்துக்கு முன்பு நடந்ததை கொதித்து புழுங்கிய நெல்லை கலத்தில் இருந்து பாயில் கொட்டியது போல் விவரித்த போது , ‘இந்த விடயத்தை பொருட்படுத்த வேண்டாம். ரிமதிக்கு காலோஸ் மேல் உள்ள ஆத்திரத்தை உங்களில் காட்டிள்ளார்’.

‘ஏன் இவ்வளவு வன்மம்?’

‘பல காரணங்கள் உண்டு. முக்கியமானது. ரிமதி இரவு பகலாக அதிக மணித்தியாலங்கள் வேலை செய்வதால் வைத்தியசாலைக்கு பணம் விரயமாகிறது என்றும் இதோடு வெகுவிரைவில் சொந்தமாக தொழில் செய்ய இருபதாக கூறி இருப்பதால் ஓவட்டைமுக்காக வேலை செய்வதாக சொல்லி காலோஸ் ஒரு முறை நேரடியாக கூறியது ரிமதிக்கு பிடிக்கவில்லை. இதை விட பல விடயங்கள் அவர்களது பகைமைக்கு காரணமாக இருக்க வேண்டும்’.

‘நான் இவர்களது அரசியலில் பந்தாகிறேன்;.’

‘இந்த வைத்தியசாலையில் எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. ஆனால் ஐம்பது பேருக்கு மேல் வேலை செய்வதால் இது வேலை செய்வதை பாதிக்காது . ஒவ்வொருத்ருக்கும் பத்து நண்பர்கள் இருப்பார்கள்.ஒருவரில் ஒருவர் தங்கியில்லாமல் இங்கு வேலைசெய்ய ஒழுங்கு பண்ணப்பட்டு இருக்கிறது. எல்லோரிடம் நட்பு வைத்திருக்கத் தேவையில்லை. அவரது வேலைகள் வேறுபடுத்தி பிரிக்கப்பட்டு இருப்பதால் எந்த பிரச்சைனையும் இல்லை.’

‘நீ எவ்வளவு காலமாக வேலை செய்கிறாய்?’

‘நாலு வருடங்கள் நாய்களை பராமரிக்கும் பகுதியில் வேலை செய்தேன். இன்று முதல்தான் நேர்சாக வேலை தொடங்கிறேன்.’

கதிரையில் அமர்நதபடி மேசையில் வைத்திருந்த போலினின் இடது கையை கவனித்போது மிக அவதானமாக தேர்ந்த ஓவியனால் வரையப்பட்ட ஓவியப்பெண்ணின் விரல்களைப் போல் மிகவும் அழகான நீண்ட விரல்கள். பாதியாக்கிய கடல் முத்துக்கள் போன்ற நகங்கள். அவை மெதுவான ரோசாநிறத்தில் நகச்சாயம் பூசப்படடு இருந்தது. அந்த இடது கையின் மோதிர விரலில் வெள்ளையான வளையமாக மோதிரம் போட்ட அடையாளம் இருந்தது.

‘என்ன என் விரலைப் பார்கிறாய்? மெதுவான புன்னகையுடன்

என் கனவுகளில் வந்த இராஜகுமாரியின் விரல்கள் போல் இருக்கிறது என சொல்ல நினைத்தாலும் நாகரீகம் கருதி அந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு ‘இவ்வளவு அழகான விரல்களை நான் வாழ்க்கையில் பார்த்ததில்லை. என்கேஜ் பண்ணி இருந்தாயா?’

‘எப்படி தெரியும்? இந்த இடத்துக்கு வந்து இரண்டு நாட்களில் இதை எப்படி தெரி;ந்து கொண்டாய்? என கேட்டபோது கன்னத்தில் படர்ந்த சிவப்பு, மூக்கு காது என கட்டுக்குள் நில்லாத அவுஸ்திரேலிய காட்டிடைத்தீ போல் வேகமாக பரவியது.

‘எனக்கு ஒருவரும் சொல்லவில்லை. உனது விரலில் பலகாலம் மோதிரம் கிடந்த அடையாளம் இருக்கு. சமீபத்தில்தான் கழட்டி இருக்கிறாய்’.

‘அது பெரிய கதை’ என சிரித்துவிட்டு அடையாளம் இருந்த விரலை பார்த்து வலதுகையின் விரல்களால் மெதுவாக நீவி விட்டபடி ‘ஐந்து மணியாகிவிட்டது. நாம் வேலைக்கு செல்லவேண்டும்.’

இவ்வளவு அழகான இவளை கழட்டி விட யாருக்கு மனம் வரும் என மனத்தில் நினைத்தபடி அவளை பின் தொடர்ந்தான் சுந்தரம்பிள்ளை.

இரவு எட்டரை மணிவரை தொடர்சியாக வேலை இருந்தது. எந்த ஓய்வும் இருக்கவில்லை.மீண்டும் அந்த தேநீர் அருந்தும் பகுதிக்கு வந்த போது வைத்தியசாலை அமைதியாகிவிட்டது. வெளிக்கதவை சாத்தப்பட்டது. இனி வருபவர்கள் அழைப்பு மணியை,அடித்து அனுமதியுடன், அங்கேயுள்ள உள்ள சிறிய கதவை திறந்தால்தான் உள்ளே வரமுடியும். கதவுக்கு அருகில் இருக்கும் அறையில் சிறிய கமராவில் வெளியே நிற்பவரை உள்ளே இருப்பவர்களால்; பார்த்துக் கொள்ள முடியும். வேலை செய்பவர்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடைமுறை உள்ளது.
ரிசப்சனின் மேல் மாடியில் இந்த வைத்தியசாலையை சுத்தப்படும்தும் குடும்பத்தினர் இருப்பதாக அந்த குடும்பத்தினருடனே கொலிங்வூட் வசிக்கிறது கூறப்பட்டிருந்தது. கொலிங்வுட்டை மீண்டும் சந்திப்பதற்கு சுந்தரம்பிள்ளை ஆவலாக இருந்தான்.

சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடித்த சத்தம் கேட்டது. கதவுக்கு அருகே உள்ள ரிசப்சன் கவுண்டரில் இருக்கும் போலினால் கதவை திறக்க முடியும் என்றாலும் இதுவே சுந்தரம்பிள்ளைக்கு எமேர்ஜென்சி நேரத்தில் வரும் முதலாவது அழைப்பாக இருப்பதால் சிறிது ஆவலுடன் எழுந்து சென்றான். ஆனால் அங்கு சென்றபோது ஏற்கனவே உள்ளே வந்தவர்கள் வரவேற்பு அறையில் நின்றிருந்தார்கள். கவுண்டரின் உள்ளே போலின் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

பதினெட்டு வயதான மெல்லிய இளம் பெண் ஊதா நிறத்தில தலைமயிரை வர்ணமடித்து காது மூக்கு உதடு என வெளித்தெரியும் அங்கங்களை எல்லாம் அழகுபடுத்த எண்ணி; வெள்ளி வளையங்கள் அணிந்திருந்தாள். கருமையான இறுக்கமான உடைகளுக்கு மேல் தளர்ச்சியான நரை நிற கம்பளி சுவட்டர் அணிந்திருந்தாள். அவளுடன் வந்தவன் தலை மயிருக்கு ஜெல் வைத்ததால் கடற்க்கரையில் வளரும் கத்தாளை போன்ற தோற்றத்தை அவனது தலை மயிர் கொடுத்தது. ஓட்டைகள் அமைந்த டெனிம் அணிந்து கருத்த பெனியன் போட்டிருந்தான். இருவரிடமும் செல்லப்பிராணிகள் எதுவும் இல்லை.

‘எங்களுக்கு ஒரு நாய்குட்டியொன்றை தத்தெடுக்க வேண்டும் என்றாள் அந்தப் பெண்

‘அதற்கு நீங்கள் காலை நேரத்தில் வந்திருக்கவேண்டும்’ போலின்.

‘நாங்கள் காலையில் படிக்கப் போவதால் நேரம் இருப்பதில்லை’

‘இப்பொழுது நாங்கள் எமேஜென்சிக்காக மட்டுமே வேலை செய்கிறோம்’

‘நாளை மல்கத்திற்கு பிறந்த நாள். அதற்கு பரிசாக அளிப்பதற்கு ஒரு நாய்குட்டி வேணும். அதிலும் மற்றவர்களால் கைவிடப்பட்ட நாய்க்குட்டி வேண்டும்.’.

‘உங்களது ஆசை நியாயமானது. இப்பொழுது அங்கெல்லாம் நான் போக முடியாது. இந்த தொலைபேசியை எடுத்து எமேஜன்சி உதவிகளை சொல்வதும் கொண்டு வந்த செல்லப்பிராணிகளை வைத்தியம் பார்க்க வைத்தியருக்கு உதவி செய்வதுமே இந்த நேரத்தில் எனது கடமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது நான் தங்களுக்கு எதுவித உதவியும் செய்யமுடியாது.’

தேனில் தடவி வந்த வார்த்தைகள் மென்மையாக அத்துடன் உறுதியாக இருந்தது. வார்த்தைகளைவிட கண்களில் தெரிந்த தெளிவும் தொலைபேசியை கையில் வைத்தபடி பேசும் உடல் மொழியும் போலினை முதல் நாள் வேலைசெய்பவளாக காட்டவில்லை. பலவருடங்கள் வரவேற்புத்துறையியில் பட்டப்படிப்பும் பின் பயிற்சியும் பெற்றவள்போல் தோற்றமளித்தாள்.

‘நாய்குட்டிகளை பார்த்து விட்டாவது போகிறோம்’ என அந்தப் பெண் கெஞ்சினாள்.

இளைஞன் போவதற்கு தயாராக இருந்தான் ஆனால் அந்த இளம் பெண்ணின் உடல்மொழியில் அவள் நாய்குட்டியை பார்க்காமல் நகரமாட்டாள் என்பது தெரிந்தது.
சுந்தரம்பிள்ளை மனத்தில் இந்த சிக்கலை போலினுக்கு சங்கடம் கொடுக்காமல் எப்படி தீர்க்கலாம் எண்ணிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் வாசல் மணி அடித்தது

‘மன்னிக்கவேண்டும்’ என கூறிவிட்டு கதவை திறப்பதற்கு சென்றாள் போலின்

‘என்னை மன்னித்து விடு’ என கூறிகொண்டு அந்த இளம் பெண் அவளது நண்பனை கட்டிப் பிடித்து தென்னைமரத்தில் தேங்காய்க்கோ கள்ளுக்கோ ஏறுபவர் போல் கைகளால் தோளை பிடித்து ஏறி தன் இரண்டு கால்களாலும் இடுப்பை சுற்றி வளைத்தபடி அமர்ந்படி உதட்டோடு முத்தம் குடுத்தாள் என்பதை விட கடைசிச் சொட்டு வழுக்கலை விழுங்குவதற்கு இளநீர் கோம்பையை உறிஞ்சி குடிப்பது போல் உறிஞ்சினாள். நிற்கும் இடத்தையோ அல்லது சுற்றி நிற்பவர்களையோ கருத்தில் கொள்ளாது தனது நண்பனை சந்தோசப்படுத்துவதில் அந்த இளம் பெண்ணின் கவனம் இருந்தது.

போலின் கதவைத் திறந்ததும் ஒரு மத்திய வயதுப் பெண் உள்ளே வந்தாள். அந்தப் பெண்ணின் கையில் பூனையை; வைத்திருக்கும் பெட்டி இருந்தது. வரவேற்பு அறையில் இந்த காதல் காட்சியை கண்டதும் சிறிது திகைத்துபடி நின்றாள்.

‘மன்னி;க்க வேண்டும்’ எனக்கூறியபடி போலின் அந்த ஜோடியின் கவனத்தைதிருப்பினாள்.

அந்தப் பெண் சிறிது வெட்;கத்துடன் அவனது தோளில் இருந்து கையை எடுத்து கால்களை இடுப்பில் விலக்கி இறங்கினாள்.

பூனையைக் கொண்டு வந்த பெண்ணிடம் இருந்து விபரங்களை எடுத்து கொண்டிருக்கும் போலினிடம் சுந்தரம்பிள்ளை முன்னால் சென்று ‘நான் இவர்களை கூட்டிக்கொண்டு தத்தெடுக்க இருக்கும் நாய்க்குட்டிகளை காட்டுகிறேன்’ என்றான்
போலினுக்கு விருப்பமில்லாதது முகத்தில் தெரிந்தாலும் எதுவும் சொல்லவில்லை.

‘வாருங்கள்’ என சொன்னதும் பலமுறை நன்றி சொன்னபடி அந்தப் பெண் சுந்தரம்பிள்ளையை தொடர அந்த இளைஞனும் அவளைத் தொடர்ந்து வந்தான் .

‘நாளைக்கு பிறந்த தினம் என்றால் இன்றைக்கு தானா நாய்குட்டி வேண்டுகிறது. .அதைவிட நாய்க்குட்டியின் சாப்பாடு மற்றய தேவைகள் இருக்கிறது. அதற்கு தயாராக இருக்கிறீர்களா?’

‘ஏற்கனவே ஒரு நாய்க்குட்டி ஒன்றை கடையில் சில நாட்களுக்கு முன்பாக வாங்கி இருந்தோம். அந்த நாய்குட்டியின் இதயத்தில் ஓட்டை என இன்று மாலை எமது மிருக வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மணித்தியலத்திற்கு முன்புதான் கருணைக்கொலை செய்யப்பட்டது என்றாள் அந்தப்பெண் சொன்னாள்.

‘எனக்கு நாய் பிறந்த தினத்துக்கு தேவை இல்லை.’ என்றான் அந்த இளைஞன்

‘நான் வாக்குறுதி அளித்திருந்தேன்’

இருவரும் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்தபடி வந்தார்கள்.

நாய்களை வைத்திருக்கு இடத்தில் லைட்டுகள் அணைக்கப்பட்டு இருந்தது. வாசலில் இருந்த லைட்டை போட்டதும் இருட்டில் அமைதியாக இருந்த நாய்கள் வருபவர்களை வரவேற்று குரைத்தன. அங்கே பத்துக் குறைவான நாய்கள் மட்டும் தத்து எடுப்பவர்களுக்குதயாராக இருந்தன.

‘இதில் ஏதாவது உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த நாய்களின் நம்பரை ஒவ்பீசில் கொடுத்து விட்டு போங்கள்’ எனக் கூறி வாசலில் நின்றார் சுந்தரம்பிள்ளை

சிறிது சேரத்தில் ‘நன்றி’ எனக் கூறிவிட்டு அந்த ஜோடிகள் மீண்டும் கலவி கொள்ளும் பாம்புகள் போல் நெருங்கி பிணைந்தபடி சென்றனர்.

காதலனுக்கு கொடுத்த வார்தையை காப்பாற்ற துடிக்கும் இளம் பெண்ணுக்கு உதவி செய்த திருப்தி சுந்தரம்பிள்ளைக்கு ஏற்பட்டது.

வரவேற்பு அறையில் வைத்தியருக்காக காத்திருந்த மத்திய வயது பெண்ணை அவரது பூனையுடன் ஆலோசனை அறைக்கு அழைத்தான் சந்தரம்பிள்ளை. மேசையில் வைத்து பரிசோதித்த போது அந்தப் பெண்ணின் பூனையின்; தலையில் ஒரு கட்டியால் சீழ் வடிந்தது.

அந்தப் பெண் ’இது பொசம் கடித்தது’ எனக் அவசரமாகக் கூறினாள்;.

‘இது பொசம் கடிக்கவில்லை. மூன்று அல்லது நாலு நாட்களுக்கு முன்பு வேறு பூனை ஒன்றுடன் ஏற்பட்ட சண்டையினால் ஏற்பட்ட காயத்தால் சீழ் பிடித்திருக்கிறது’.

ஓவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் ஒவ்வொரு விடயத்திற்கும் மிகவும் இலகுவான நேரடியான விளக்கங்கள் வத்திருப்பார்கள். சீழ் பிடித்த சிறிய காயமாக இருக்கட்டும் அல்லது மிக சிக்கலான கான்சர் போன்ற விடயமாக இருந்தாலும் ஏதாவது சாப்பாடு அல்லது சூழல் என சுலபமான விடைகளை வைத்து விடுவது மனிதர்களுக்கான மருத்துவத்தில் ஏராளமாக அறியமுடியும். இந்தளவு இல்லாவிட்டாலும் புறக்கணிக்க முடியாத அளவு விலங்குகளுக்கான வைத்தியத்திலும் இப்படியாக விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டு ஐந்து வருட மருத்துவ பயிற்சியை கூட திணறடித்துவிடுவார்கள்.

சுந்தரம்பிள்ளையின் கூற்றை நம்பாதது அந்த பெண்ணின் கண்களில் தெரிந்தது. அதை பொருட்படுத்தாமல் அந்த சீழ் வடிந்த புண்ணை கழுவிவிட்டு அன்ரி பயற்றிக் மருந்தை ஊசியால் அந்த பூனைக்கு; ஏற்றிவிட்டு பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்தார்.

‘நீங்கள் வளர்க்கும் ரைகருக்கு இரண்டு உலகங்கள் உண்டு. உங்கள் வீடு சோபாகட்டில் என நீங்கள் விலை கொடுத்து ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறீர்கள். அந்த சூழலில் வாழும் ரைகர் இதைவிட தானும் உங்கள் வீட்டை சுற்றி ஒரு பிரதேசத்தை தனது வாசனைத் தன்மையால் உருவாக்கியுள்ளது. அந்த பிரதேசம் உங்களுக்கு தெரியாது. அந்த இடத்தை மற்ற பூனைகள் ஆக்கிரமிக்கும்போது உங்கள் ரைகர் உண்மையில் பெங்கால் ரைகராக மாறும். இந்த யுத்தத்தின் விழுப்புண்தான் இந்த காயம்’

‘ரைகருக்கு ஏற்கனவே விதையை எடுத்தாகிவிட்டதே?

‘பெண்பூனைகளை தேடி செல்வதை மட்டும்தான் நீங்கள் விதையை எடுப்பதால் கட்டுப்படுத்தமுடியும் மேலும் இந்த வசந்த காலத்தில் பூனைகள் சினை கொள்ளுவதற்கு தேடித்திரியும் காலம். அலைந்து திரியும் ஆண் பூனையொன்று ரைகரின் பிரதேசத்தை ஆக்கிரமித்திருக்கலாம்.நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆண் மட்டுமல்ல பெண் பூனையும் போராடும்’

‘சில நாட்களுக்கு முன் நடு இரவில் பூனையின் சத்தம் கேட்டேன்.’

இப்பொழுது அந்தப் பெண்ணின் அமைதி தெரிந்தது

‘அன்றுதான் நடந்திருக்கு. நீங்கள் இரவுகளில் ரைகரை வீட்டின் உள்ளே வைத்திருப்பதன் மூலம் இப்படியானவற்றை குறைக்க முடியும்’.

‘முன்பும் இப்படி சீழ்வடியும் புண் வந்திருக்கிறது. ஆனால் காரணத்தை ஒருவரும் இப்படி சொல்லவில்லை.

‘இன்று இரவில் நீங்கள் வந்ததால் அதிக நேரம் என்;னால் பேசமுடிந்து’ எனக் கூறி அந்த பெணணை வெளியே அனுப்பி வைத்தார்.



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!